’’முதலமைச்சரிடம் புகார் சொன்னாலும் பலன் இல்லை...!’’

சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்துடன் உரையாடல்
’’முதலமைச்சரிடம் புகார் சொன்னாலும் பலன் இல்லை...!’’
Published on

தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும்நிலையில், ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் தங்கள் வலுவைக் காட்டும் வேலையில் இறங்கியுள்ளன. இடதுசாரி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, மக்கள் கோரிக்கைப் பிரச்சாரம் என ஜூன் மாதம் 11ஆம் தேதி முதல் 20ஆம் தேதிவரை மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணத்தை நடத்தியது. பாதியளவு மாவட்டங்களுக்குச் சென்றுவந்துள்ள மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் உரையாடல்!

உங்களின் இந்தப் பிரச்சாரத்துக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருந்தது?

எங்கள் கட்சியின் அகில இந்திய மாநாட்டிலும் விழுப்புரம் மாநில மாநாட்டிலும் தீர்மானித்தபடி, கட்சியின் சுயேச்சையான பிரச்சாரத்தை எடுத்துச்செல்வது இடதுசாரி மாற்றுக் கொள்கைகளை மக்களிடம் கொண்டுசெல்வதுதான் இந்தப் பிரச்சார இயக்கத்தின் நோக்கம். பொதுவாக மக்கள் மத்தியில் விலைவாசி உயர்வு, வேலையின்மை, குடிமனைப் பட்டா, நூறு நாள் வேலைத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உரிமைத் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை என மக்கள் பல்வேறு பிரச்னைகளைத் தெரிவித்தார்கள். குறிப்பாக, பெண்கள் மத்தியில் விலைவாசி உயர்வைப் பற்றி கடுமையான அதிருப்தி இருக்கிறது. அவர்கள்தானே பெரும்பாலும் குடும்பங்களை கவனிக்கிறார்கள். காய்கறி, மளிகை, பொதுவாகவே செலவு, விலைவாசி கூடிவிட்டது என்பது பெண்களிடமிருந்து அதிகமாக வந்த முறையீடு!

குறிப்பாக, மத்திய அரசைப் பற்றி, மாநில அரசைப் பற்றி என்னென்ன சொன்னார்கள்?

பெட்ரோல், சமையல் எரிவாயுவின் விலை குறித்து மக்கள் கடும் அதிருப்தியுடன் சொல்கிறார்கள். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இங்கு மட்டும் விலையைக் குறைப்பதில்லை என்பதைக் குறிப்பிடுகிறார்கள். மற்றவை மறைமுகமாக இருக்கிறது. இது மக்களுக்கு நேரடியாகத் தெரிகிறது. சிலிண்டருக்கு ஐம்பது, 100 என விலையேறுவதைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். இதன் விலையேற்றத்துக்கு நியாயமான எந்தக் காரணமும் இல்லை; தனியார் நிறுவனங்களுக்காக மத்திய அரசு இதைச் செய்கிறது என்கிறார்கள்.

எத்தனையோ இலட்சம் பேருக்கு வேலை தருவதாக மோடி அரசு சொன்னதே... ஆனால் வீட்டுக்கு ஒருவராவது வேலை இல்லாமல் இருக்கிறார்கள்; நன்றாகப் படித்தவர்களுக்கே வேலை இல்லை. பல கிராமங்களில் மக்கள் தெளிவாகப் பேசுகிறார்கள்... அவர்கள் புள்ளிவிவரத்துக்குள் எல்லாம் போகவில்லை... தங்கள் ஊரில் இந்த ஆண்டில் போன ஆண்டில் இத்தனை பேர் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள்; அப்படியானால் அரசாங்கம் யாருக்கும் வேலை தரவில்லை என்று பளிச்செனச் சொல்கிறார்கள்.

அடுத்தது... நூறு நாள் வேலைத்திட்டம். ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கே 100 நாள் தொடங்கி 40 நாள்வரை வேலை இருந்தது. இது 20,15, 10 நாளெனக் குறைந்துவருகிறது. இதிலும் மூன்று நான்கு மாதங்கள்வரை கூலிபாக்கி வைத்திருக்கிறது அரசு. இது அவர்களை நேரடியாக பாதிக்கிறது. தனித்து வாழும் பெண்கள், முதிய பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

ஆண்டுக்கே 100 நாள்தான் அதிகபட்சம் இந்தத் திட்டத்தில் வேலை. இதை நம்பித்தான் வாழ்க்கையை ஓட்டக்கூடிய நிலைமையில்தான் இந்த மக்கள் இருக்கிறார்களா?

கிராமப்புறத்தில் விவசாயத்தில் வேலை குறைந்துவருகிறது. முழுக்க முழுக்க இதைச் சார்ந்திருக்கிற ஒரு பகுதி மக்கள் ஊரகப் பகுதிகளில் இருக்கிறார்கள். இதில், கொஞ்சம் உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் புலம்பெயர்ந்து கேரளம், கர்நாடகத்துக்கு வேலைக்குப் போய்விடுகிறார்கள். தனித்து வாழும் பெண்கள், வயதானவர்கள் முழுவதும் இதை நம்பித்தான் இருக்கிறார்கள். அவர்களால் புலம்பெயர முடியாது. இது இல்லையென்றால் வேறு என்ன வழி என்பது பெரிய கேள்வியாக மாறியிருக்கிறது. வாழ்க்கை நடத்தவேண்டும், கிடைக்கிற எந்த வேலையானாலும் சரி, ரேசன் அரிசி வாங்கிச் சாப்பிட முடிந்தால் போதும் என்பது கொடுமை. வெளியிலிருந்து பார்ப்பது வேறு, யதார்த்தமாக ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் உட்கார்ந்து பேசினால் நிலைமை முற்றிலும் வேறாக இருக்கிறது.

மாநில அரசாங்கத்தின் மீது மக்களுக்கு எப்படியான கருத்துகள் இருக்கின்றன?

மாநில அரசின் நலத் திட்டங்கள் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்பது ஒரு குறையாக இருக்கிறது. முதியோர் உதவித்தொகை பெரும் பிரச்னையாக இருக்கிறது. ’ஏற்கெனவே வந்துகொண்டிருந்த உதவித்தொகையை நிறுத்திவிட்டார்கள்; கேட்டால், மேலிடத்து உத்தரவு என்கிறார்கள்; என்ன காரணமெனத் தெரியவில்லை’ என்று ஜனங்கள் சொல்கிறார்கள். இன்னொரு தரப்பு, புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் கிடைக்கவில்லை என்பதையும் குறையாகச் சொல்கிறார்கள்.

மகளிர் உரிமைத்தொகையிலும் இப்படி கிடைக்கவில்லை என நிறைய புகார்கள். தகுதி என அரசாங்கம் ஒரு வரையறை வைத்திருக்கிறது. அதற்குள் வராதவர்கள், தவறாக விடுபட்டிருப்பவர்கள் எல்லா மாவட்டங்களிலும் இருக்கிறார்கள். இதை எந்த ஊரும் பாக்கி இல்லாமல் எங்களிடம் சொன்னார்கள். அரசாங்கம் இதை ஏற்றுக்கொண்டுதான் ஜூலை 15இல் முகாம் நடத்துவதாக அறிவித்திருக்கிறது. பார்ப்போம்.

இன்னொன்று, கிராமப் புறத்தில் கனிமவளக் கொள்ளை பற்றி பல ஊர்களில் கவலையோடு சொல்கிறார்கள். மலையை உடைத்து நொறுக்குகிறார்கள்; லாரிகளில் மணலை ஏற்றிக்கொண்டு கன்னாபின்னாவென்று போகிறான்; கணக்குவழக்கே இல்லை; அதிகாரிகள் பெருமளவில் பணத்தை வாங்கிக்கொண்டு இயற்கை வளம் கொள்ளை போகிறது என்பது இன்னொரு பரவலான புகார்.

அரசாங்க நிர்வாகம் ஒரு பக்கம் புதியவகையாக பரபரப்பாக இருக்கிறது. அரசு எந்திரம் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள்?

அரசு அதிகாரிகளிடம் தரும் மனுக்கள் மீது உரிய காலத்தில் தலையீடோ உரிய காலத்தில் பதிலோ இல்லாமல், வழக்கமாக இருப்பதைப்போலத்தான் இருக்கிறது...பிடிஓ, தாசில்தார், கலெக்டர் அலுவலகம் எதுவாக இருந்தாலும் என மக்களுக்கு பெரிய மனக்குறையாக இருக்கிறது. ... எருமைமாட்டு மேல் மழை பெய்வதுமாதிரிதான் நிலைமை இருக்கிறது என்றே சொல்கிறார்கள். இந்த அதிகாரவர்க்கம் உரியமுறையில் செயல்படவில்லை, மக்களுக்கு ஆதரவாக அது மாறவில்லை எனப் பெரிதாகச் சொல்கிறார்கள். எத்தனையோ திட்டங்கள் கொண்டுவந்தாலும், புகார்களை முதலமைச்சருக்கே நேரடியாக மனுக்களை அனுப்பினாலும், நடவடிக்கைக்கு கீழேதான் அது போகிறது. உதாரணத்துக்கு, பட்டா மாறுதல்... ஐந்து வருடம், ஏழு வருடம் அப்படியேதான் இருக்கிறது... மனு கொடுத்து ஆட்சி முடிந்து அடுத்த ஆட்சியே வந்துவிடுகிறது. என்ன சொல்ல?

நகரங்களில் எப்படி இருந்தது...?

கிராமம், நகரம் இரண்டிலுமே மனைப்பட்டா என்பது பரவலான பொதுவான பிரச்னை. 100 ஆண்டுகள், 75 ஆண்டுகள் வசிக்கும் பகுதிகளில் நீதிமன்ற உத்தரவு, அதிகாரிகள் காலிசெய்யச் சொல்கிறார்கள்... இதில் நீதிமன்றத்தைக் காட்டி அரசாங்கம் தப்பிக்க முயற்சிசெய்யலாம். தீர்வு என்ன? சும்மா இடத்தை மாற்றுவது மட்டும் இல்லை. இவர்களின் வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்வி, அக்கம்பக்கத்தவருடன் உறவு என பல அம்சங்களும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மரத்தைப் பிடுங்கி அப்படியே இன்னொரு இடத்தில் நடுவதைப் போல அல்ல இது. அரசாங்கமும் நீதிமன்றமும் இதை யோசிக்கவேண்டும்.

ஊர்ப்புறங்களிலும்கூட இப்படி நடக்கிறதுதானே, இல்லையா?

நேற்று திருவள்ளூரில் தலித் மக்கள் குடியிருப்பை ஜேசிபியை வைத்து இடித்துத் தள்ளுகிறார்கள். இந்த ஆட்சியில் ஜேசிபிக்கு அதிகம் செலவுசெய்கிறார்கள். சம்பளத்தைவிட அதற்கான வாடகைதான் அதிகமாகப் போகும்போல! இப்படி கண்மூடித்தனமாக ஆக்கிரமிப்பு அகற்றல் எனும் பெயரில் சாதாரண மக்களை அப்புறப்படுத்துவது மக்கள் மத்தியில் பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. எங்களைக்கூட விடுங்கள், இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என நினைக்கலாம். உள்ளூர் அதிகாரிகள், கட்சிக்காரர்கள் அரசாங்கத்துக்குச் சொல்லவேண்டும்தானே? இதே போக்கு நீடித்தால் அவர்கள் பெரும் சிரமத்தை அவர்கள் சந்திப்பார்கள்.

தலைநகரத்தில் மக்களின் உணர்வு வெளிப்பாடு எப்படி...?

சென்னையில் ஆற்றுக் கரை ஓரத்தில் இருக்கும் மக்களை சிங்காரச் சென்னை என்ற பெயரில் தூக்கிவீசுவதற்கு கடுமையான எதிர்ப்பு இருக்கிறது. குறிப்பாக, இளைஞர்களிடம்..! நகரத்துக்குள் ஏழை, எளிய மக்கள் வாழக்கூடாதா? மேல்தட்டுக்குத்தானா இந்த நகரம் என அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஒட்டுமொத்த சமூகமும் பதில் அளிக்கவேண்டிய கேள்வி இது. இந்த மக்களின் உழைப்பு இல்லாமல் சென்னை இருக்கிறதா? ஏற்கெனவே பக்கிங்காம் கால்வாயில் தூண் போட்டு இரயில் ஓடுகிறது. கூவத்திலும் தூண் போட்டிருக்கிறார்கள். கண்மூடித்தனமாக இப்படிச் செய்துகொண்டிருக்கிறார்கள். குடியிருப்பு, பட்டா இரண்டும் இங்கு முக்கியமான பிரச்னைகள்.

உதாரணத்துக்கு, சென்னை திருவொற்றியூரில் ஒரு சுடுகாடு இருக்கிறது. தலித் மக்களுக்கானது. 75 ஆண்டுகளாக அங்குதான் புதைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது மாநகராட்சி திடீரென வந்து அங்கு புதைத்தால் மரணச் சான்றிதழ் தரமாட்டோம்; அங்கிருந்து மூன்றுநான்கு கி.மீ. தொலைவில் போய் வேறொரு இடத்தில் புதைத்தால்தான் இறப்புச் சான்று தருவோம் என நிபந்தனை போடுகிறது. ஒருவரின் மனைவி 2019இல் இறந்துவிட்டார். இதுவரை இறப்புச்சான்று வாங்கமுடியாமல் இருக்கிறார். ஒருவர் மட்டும் இல்லை. முக்கால் நூற்றாண்டாக அதே இடத்தில்தான் புதைக்கிறார்கள். சுடுகாடு சுடுகாடுதானே... மக்கள் கேட்டால் என்ன காரணமெனத் தெரியவில்லை. மாநகராட்சிக்கு இடம் வேண்டும், காலிசெய்யுங்கள் என்று மட்டும் சொல்கிறார்கள். எங்கள் கவுன்சிலர் மூலம் முறையீட்டுக்கு வழிசெய்திருக்கிறோம்.

பர்மா தமிழர்கள் பிரச்னை வடசென்னையிலும் தென்சென்னையிலும் குறிப்பிடத்தக்க ஒன்று. தெற்கில் சோழிங்கநல்லூர் பகுதியில் பர்மா காலனி எனும் பகுதிக்குப் போயிருந்தேன். சுமார் ஐந்தரை ஏக்கர் பரப்பில் அவர்களுக்கு ஒரு காலத்தில் தனி இடம் ஒதுக்கப்பட்டது. பத்துக்குப் பத்து வீடு கட்டி குடியிருக்கிறார்கள். அண்மையில், அங்கு பெரும் பெரும் தகவல்நுட்ப நிறுவனக் கட்டடங்கள் வந்துவிட்டன. அவற்றுக்குப் பக்கத்தில் இப்படி குடிசைகள் இருப்பதா என நினைக்கிறார்கள். நிலத்தின் மதிப்பும் அங்கு கோடிக்கணக்கில் உயர்ந்துவிட்டது. அங்கு அன்றாடங்காய்ச்சிகள் ஆக்கிரமித்தபடி இருப்பதாக நினைக்கிறார்கள். இந்த இடத்தை எடுத்துக்கொள்ள மாநகராட்சி முயல்கிறது. அவர்களை அப்புறப்படுத்த முயற்சி நடக்கிறது.

இருளர் பழங்குடியினருக்கு இது பெரும் பிரச்னையாகவே இருக்கிறது...

சென்னையிலா...?

இல்லை. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் இருளர் பழங்குடி மக்கள் கணிசமாக வாழ்கிறார்கள். பெரும்பாலும் இவர்கள் நீர்நிலைப் புறம்போக்கில்தான் குடியிருக்கிறார்கள். ஊருக்குள் அவர்களை வாழவிட்டால்தானே வாழ்வதற்கு? கலைஞர் வீடு, மோடி வீடு திட்டங்கள் எதுவும் பட்டா இல்லாவிட்டால் கிடைக்காது. பட்டா கேட்டால் நீர்நிலைப் புறம்போக்கு என தர மறுக்கிறார்கள். மொத்தத்தில் அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையாக இருக்கிற இந்த மக்களுக்கு அரசாங்கத்தின் எந்தத் திட்டமும் போய்ச்சேராது. ஒரே காரணம், பட்டா இல்லை! இது இருளர் மக்களின் அடிப்படை வாழ்விட உரிமைமறுப்பு. திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் என்னிடம் 500 மனுக்கள் தந்திருப்பார்கள்.

இதில் குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால், இவர்கள் பல தலைமுறைகளாக அதே இடத்தில் வசிக்கிறார்கள். அந்த இடங்களில் இப்போது நீர்நிலையும் இல்லை ஒன்றும் இல்லை. பக்கத்தில் குட்டை இருந்திருப்பது ஒரு காலத்தில்தான்... ஆனால் இப்போதும் ஆவணத்தில் குளம், குட்டை, வாய்க்கால் இருப்பதாக வருவாய்த் துறை காட்டுகிறது. வாய்க்கால் பாசனம் எல்லாம் போய், நிலம் முழுக்க வீடாக மாறிவிட்டது. வாய்க்காலும் இல்லை; தண்ணீரும் வரவில்லை. ஆனால் பிரிட்டிஷ் காலத்தில் 1920, 40களில் உருவாக்கப்பட்ட ஆவணத்தில் அப்படி இருக்கிறது என்றால், இப்போது ஊர் ஆகிவிட்டதுதானே? ஊர் ஆனபிறகு ஆவணத்தை மாற்ற வேண்டியதுதானே? தமிழ்நாடு அப்போது இருந்தபடியேவா இருக்கிறது. மாறவில்லையா?

நகரமயம் ஆகிறது எனப் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறீர்கள். எப்படி நகரமயம் ஆகிறது? நகரமயம் ஆகும்போது வீடாக மாறத்தானே செய்யும்? அரசாங்கம் தன்னுடைய நிலையை மாற்றிக்கொண்டு மறுசர்வே செய்யவேண்டும். புதிய அரசாணையை வெளியிடவேண்டும். மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள்.

காவிரிப் பாசனப் பகுதிக்கும் போனீர்கள்தானே... அங்கு என்ன நிலவரம்?

நெல்லுக்கான விலை 2,500 ரூபாய் அறிவித்திருக்கிறது, அரசு. இது 2021இல் கொடுத்த வாக்குறுதி. நான்கு வருடங்களில் உரம், பூச்சிமருந்து, டீசல் காரணமாக டிராக்டர் வாடகை உயர்வு எனப் பல வகைகளில் உற்பத்திச் செலவு கூடியிருக்கிறது. பழைய விலை அறிவிப்பு போதுமானதாக இல்லை. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரான நிலைமைக்கு ஏற்ற அளவு கூடுதலாக விலைவைக்க வேண்டும் என்கிறார்கள். காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டபிறகுதான் நான் டெல்டாவுக்குப் போனேன். தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை எல்லா மாவட்டங்களிலும் முன்கூட்டியே தூர்வார முடியும். ஆனால், அதைச் செய்வதே இல்லை. எப்போதும் இதே பொழப்பாப் போச்சு என்கிறார்கள். தண்ணீரைத் திறந்துவிட்டு சரியாக அதற்கு முன்னால் பொக்லைன் எந்திரத்தையும் பின்னாடியே தூர்வாருகிறார்கள் என்பது விவசாயிகள் மத்தியில் பரவலான அதிருப்தி.

இந்த ஆட்சிக்கு உங்கள் மதிப்பெண் எவ்வளவு?

(மெல்லிய அலர்ட் சிரிப்புடன்) மக்கள் கருத்துதானே முதன்மை... நாங்கள் சந்தித்த அளவில் மக்களிடம் பிளஸ், மைனஸ் இரண்டுமே வெளிப்படுகிறது. சில நலத்திட்டங்கள் மக்களிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது. பயன் கிடைத்தவர்கள் வரவேற்கிறார்கள். எந்தக் கையூட்டும் இல்லாமல் ஊழல் இல்லாமல் நேரடியாக வங்கிக்குப் பணம் வந்துவிடுகிறது. விடுகிறது. முன்னரெல்லாம் மணியாடர் வரும்போது, காசு தரவேண்டும்; மனு கொடுக்கவேண்டும். அது இப்போது இல்லை. ஆனால், இப்படியான குடும்பங்களுக்கு மற்ற பல பிரச்னைகள் இருக்கின்றன.

குடியிருப்பு உரிமை, வாழ்வதற்கான இடம் என்பது அடிப்படையான ஒன்று. எத்தனை ஆயிரம் நீங்கள் கொண்டுபோய்ச் சேர்த்தாலும் அவர்களை வாழ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தும்போது எல்லாமே அடிபட்டுப் போய்விடும். அதை அரசு கவனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com